அப்போது எனக்கு காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயது!?
படிக்கும்போது நண்பர்கள் "மச்சீ, அவ உன்னையே பார்க்கிறாடா" என்று கோர்த்துவிட, நாமும் அதையே நம்பி "மாப்ளே நானும் ஹீரோதான்... ஹீரோதான்.... பார்த்துக்கோ..." அப்படீன்னு வடிவேலு ரேஞ்சுக்கு பில்டப் பண்ணுன காலகட்டத்தில், இன்று உன்னை பார்த்துவிடுவது என்ற முடிவில் இருந்தேன்! அதுவும் உன்னுடைய வீட்டில் நடக்கும் விழாவில்! உன்னிடம் முதல்முறையாக பேசிவிடுவது என்று பலவாறாக ஒத்திகையும் பார்த்து முடித்தாகிவிட்டது.
விழா சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது. நானும் உன்னை எப்படியாவது பார்த்துவிடுவது என்று பலவகையில் முயன்றுகொண்டிருந்தேன். நீயோ உன்னுடைய அறையிலிருந்து வெளியே வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. எப்படியாவது உன்னை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தால், அங்கு நான் கண்டது 6 அடி 8 அங்குல அஜானுபாகுவான உன்னுடைய உடன்பிறப்பு. வேறு வழியில்லை. வாலை சுருட்டிக்கொண்டேன். விழா இனிதே முடிந்தது. அனைவரும் தத்தம் வீடுகளுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். பேசவேண்டும் என்று போட்ட ஒத்திகைகள் கண் முன்னே வந்துகொண்டிருக்க, "அடச்சே! ஒரே ஒரு பார்வை கூட பார்க்க முடியவில்லையே" என்று நொந்தவனாக வீட்டை அடைந்தேன்.
வீட்டிற்கு வந்தால் என் அண்ணன் விழா மிகச்சிறப்பாக நடந்ததல்லவா என்று கூறி என்னுடைய எரிச்சலில் எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூறியதில் ஒரு வார்த்தை என்னுடைய மனத்தில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா?" என்று பல்பு எரியவிட்டது! ஆம். அண்ணன் "வீடியோ காசெட் இன்னும் இரண்டு தினங்களில் எடிட் செய்யப்பட்டு நமக்கு கிடைத்துவிடும்" என்றார். ஆஹா அண்ணனின் வாக்கு அருள் வாக்காகப்பட்டது.
இரண்டு தினங்கள் என்பது மிகவும் மெதுவாகச் சென்றது. நானே அண்ணனிடம் பேசி வீடியோ எடுத்தவரின் தொலைபேசி எண்ணை வாங்கி அவரை நச்சரித்து சீக்கிரம் கேசட் கொடுக்க வற்புருத்தி பெற்றுக்கொண்டேன். இப்போது வீட்டில் கேசட் போட்டு பார்க்கலாம் என்றால் அனைவரும் வந்து டிவி பெட்டிக்குமுன் அமர்ந்துவிட்டனர். நமக்கோ வெட்கம் கலந்த பயம். எங்கே நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடுமோ என்று. பயந்ததுபோலவே என் அக்கா கேட்டுவிட்டார் "என்னடா அந்த ரூமையே திருட்டு முழியோட பார்த்துக்கொண்டிருக்கிறாய்?" என்று. "வீடியோகிராஃபரை கொல்லவேண்டும். நாய் நம்மையே வளைத்து வளைத்து படம் எடுத்திருக்கான்" என்று மனதில் கருவிக்கொண்டே நீ எந்த ஷாட்டில் வருகிறாய் என்று காத்துக்கொண்டிருந்தேன்.
அதோ என் தேவதை! நீல நிறத்தில் பட்டுடுத்தி, அதில் வெள்ளியிலாலான சிறு பூக்களோடு! உன்னை எப்படி வர்ணிப்பது எதை வர்ணிப்பது?
உன்னுடைய கருங்கூந்தலையா அல்லது உன்னுடைய கருவிழிகளையா அல்லது ரோஜாப்பூ நிற கன்னங்களையா அல்லது அந்த ஆரஞ்சு அதரங்களையா அல்லது சங்குக் கழுத்தையா அல்லது உன்னுடைய இல்லாத இடையையா?
என் வானில் பூந்தோட்டம்
என் வாழ்வின் தேரோட்டம்
என் வாழ்க்கைக்குத்தந்தாய் உயிரோட்டம்
அன்றுமுதல் எனக்கு பிடித்த நிறம் நீலமானது.
அந்த 1 நிமிடம் 26 நொடி வீடியோ என்னை கிருக்கனாக்கியது. அந்த வீடியோ காசெட்டுக்கு வாயிருந்தால் அது என்னை திட்டித்தீர்த்திருக்கும். நேரம் கிடைத்தபோதெல்லாம், தனிமையில், திருப்பித் திருப்பி அந்த 89 நொடி (கிட்டத்தட்ட) வீடியோவை, படம் தேயும் வரை பார்த்தேன்.
இந்த இனிய எண்ணங்களை உன்னிடம் சொல்லவேண்டும். உன்னை என்னவளாக்கிக்கொள்ளவேண்டும் என்று எண்ணிக்கொண்டு மீண்டும் ஒரு முறை கண்களை மூடி உன்னைப்பார்த்து பேசவேண்டியதை ஒத்திகை பார்த்தேன்.
"என்னங்க... என்னங்க... பஸ்ஸுலே உட்காந்தா எப்படிதான் தூக்கம் வருதோ உங்களுக்கு. எந்ந்ந்த்த்திரிங்ங்க்ங்க்க! சைதாப்பேட்டை வந்திடுச்சு எந்திருங்க!" என்ற என் நீலக்குயிலின் குரலைக்கேட்டு கண்விழித்தேன். நான் அவரை நோக்க அவர் என்னை நோக்க... "என்ன மீண்டும் கனவா?" என்றார்.
அவர் அவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அதுவொரு அழகிய நிலாக்காலம் என்று மனம் உள்ளுக்குள் பாடிக்கொண்டது!
கனவுகாணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் மேகங்கள் என்று கண்சிமிட்டியபடியே என்னவள் பஸ்ஸிலிருந்து இறங்க நானும் அவரை பின்தொடர்ந்தேன்.