Thursday 4 May 2017

மதுரைக் கல்லூரி ஞாபகங்கள்

30 ஆண்டுகள் என்பது வாழ்க்கையில் பாதிக்கும் அதிகமான நாட்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம்தான்.  உண்மையிலேயே கடந்த 34 ஆண்டுகளுக்கு முன் மதுரைக் கல்லூரியில் கால் எடுத்து வைத்த நாங்கள் அனைவரும் மூன்றாண்டுகள் கழித்து 1986-ல் கடைசியாக கல்லூரியின் அருமையான நாட்களை அனுபவித்து பிரிந்தோம்.  அதற்கு பின் அனைவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு ஊர்களுக்கு வெவ்வேறு வேலைகளுக்காக தங்களின் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டு வாழ்க்கையை வாழத்தொடங்கியிருந்தோம்.

திடீரென்று ஒருநாள் (கடந்த ஜூலை 2016) வாட்ஸ்அப் ரிக்வெஸ்ட்-ல் ஒரு புது மெஸ்ஸேஜ் வந்தது.  அதில் கல்லூரி நண்பர்கள் சிலர் கூடி குழு உருவாக்கி இருந்தனர்.  ஆச்சரியமாக இருந்தது.  முப்பது ஆண்டுகளுக்கு பின் இவர்களின் நினைவுகள் மற்றும் எனது கடந்த காலங்கள்.... பல மாற்றங்கள் .... பலப்பல சாதனைகள்.... மேலும் பற்பல சோதனைகள்.... இப்படி பலவித இனிய/கசந்த நினைவுகள் மனத்தை வாட்டியெடுத்தன.  எப்படியென்றாலும் காலம் நம் அனைத்து தழும்புகளையும் ஆற்றிக்கொண்டேதான் இருக்கின்றது.

கல்லூரி நண்பர்களோடு தினமும் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள ஆரம்பித்திருந்தோம்.


எங்களின் ஒரு நண்பன் தாத்தாவும் ஆகியிருந்தது ஆச்சரியமளித்திருந்தது.
சந்துரு
 
கல்யாணி
எங்களில் அனைவரையும் இறைவன் தந்தையாக்கி அருள் புரிந்திருந்தான். ஆனால் எங்களின் ஒரு நண்பனோ அந்த இறைவனுக்கே தன்னை தந்தையாக்கிக்கொண்டு அருள் செய்தான்.  வாழ்த்துகள் நண்பா!
இப்படியே தொலைபேசியிலும் வீடியோ சாட்டிலும் பேசிக்கொண்டிருந்த நாங்கள் ஒரு நாள் மீண்டும் ஒன்று சேரவேண்டும் என்று முடிவெடுத்தோம்.  
அறிவு
அதற்கு ஏற்ப அமேரிக்காவில் வாழ்ந்துகொண்டிருந்த நண்பன் இரண்டு வார விடுப்பில் மதுரைக்கு வருவது அறிந்து உடனடியாக ஒரு சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  மே 1 என்று தேதியும் முடிவெடுக்கப்பட்டது. முடிந்தவரை அனைவரும் கலந்துக்கொள்வது முடியாதபட்சத்தில் அடுத்த சந்திப்பில் பார்த்துக்கொள்வது என்று முடிவேற்று அந்த இனிய நாளில் சந்தித்தோம்.  எங்களின் பட்டாளத்தில் தாத்தாவாகியிருந்த சந்துரு, தன்னுடைய வீட்டில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தான்.  அனைவரும் காலை 11 மணிக்கு சந்திப்பது என்று முடிவானது.


முதலில் நான் ஆஜராகியிருந்தேன்.  பின்னர்  குட்டி, ரவி, நாகேஷ், அறிவு மற்றும் ரகு ஒன்றாக வந்து சேர்ந்தனர்.  அதன் பின் பாபுவும் கல்யாணியும் வந்தனர்.  அதற்கு பிறகு மானும் சுரேஷும் வந்தனர். 
கல்யாணி மிஸ்ஸிங்!

வந்த ஒவ்வொருவரும் தங்களை பற்றி அறிமுகம் (1986-லிருந்து 2017 வரை நடந்தவற்றை) செய்துகொண்டோம்.  இதில் ஒருவன் கடந்த 31 ஆண்டுகளில் ஒரே இடத்தில் வாழ்ந்துள்ளான்.
அதியமான்

மற்றொருவனோ ஏதோ மதுரை டூ திண்டுக்கல் போய் வருவது போல சென்னைக்கும் ஐரோப்பிய/அமேரிக்க நாடுகளுக்கும் சென்று வந்து கொண்டிருக்கின்றான்.
ரகுபதி
ஒருவன் முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியர்
டாக்டர் ரவிந்திரன்
இன்னொருவன் தொலை தொடர்பு துறை அதிகாரி
குட்டி வெங்கடாச்சலம்
மற்றொருவனோ தொடர்வண்டித்துறையில் அதிகாரி
நாகேஸ்வரராவ்
வேறுவொருவனோ சொந்தமாக மருந்து தாயாரிக்கும் நிருவன முதலாளி
பாபு
இதோ நமது மார்கண்டேயன் உள் அலங்கரிப்பு நிருவனம் நடத்துபவர்
சுரேஷ்
இதோ  ஹஜ்ஜுக்கு செல்ல இருக்கும் நான்
ஷேக் அசீசுத்தீன்
இந்த சந்திப்பில் வரமுடியாத நண்பன் மூன்று நாட்களுக்கு பின் சில நண்பர்களை சந்தித்தான்.
சுரேஷ் G


மேலே சொல்லப்பட்ட சாதனைகள் யாவும்  ஒவ்வொருவருக்கும் அப்படியே சுலபமாக வந்துவிட்டதல்ல.  மிகப்பெரிய வாழ்க்கை போராட்டம்.  எங்களில் ஒவ்வொருவரும் இந்த போராட்டத்தை சந்தித்தே வந்துள்ளோம்.  

கல்லூரியில் படிக்கும் போதே வேலை பார்த்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபாய் (yes, Re 1/= per hour) என்று சம்பாதித்து காலத்தை கழித்தவரும் இருக்கின்றனர். மாதம் ரூ 600, ரூ 800 என்று சம்பளம் பெற்று வாழ்க்கை ஆரம்பித்தவர்களும் இருக்கின்றனர்.  கல்லூரியில் படிக்கும்போதே முதலாளிகளாக இருந்து பின்னர் முழுவதுமாக நஷ்டமடைந்து இன்று மீண்டெழுந்தவர்களும் இருக்கின்றனர். அதேபோல நண்பனை நம்பி தன்னுடைய வீட்டு பத்திரத்தையே அடகாக வைத்து கூட்டாக தொழில் ஆரம்பித்து அதில் நஷ்டமடைந்தவரும் உண்டு. கூட்டுத்தொழில் செய்து வந்தவர் இன்று தனியாக வெள்ளி நகை வியாபாரம் செய்பவரும் இருப்பது போல மருத்துவ முகவராக இருந்து பின்னர் தானே ஒரு மருந்து தயாரிப்பு நிறுவன அதிபதியானவரும் இருக்கின்றார்.  இப்படி உள்நாட்டிலேயே வேலையும் தொழிலும் செய்பவர்களின் மத்தியில் கணணி மென்பொருள் துறையில் அயல் நாடுகளில் வாழ்பவர்களும் இருப்பதும் பெருமையே!  இது மட்டுமல்லாமல் பத்திரிக்கை துறையிலும் கல்வித்துறையிலும் கால் பதித்தவர்களும் நம்மில் உள்ளனர்.  இப்படி பல்வேறு படித்துறைகளில் இன்று இருந்தாலும் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் நாம் சந்தித்ததை போன்றே இன்றும் எங்களின் அந்த ஒரு நாள் மிகவும் இளமையாகவும் மன நிறைவாகவும் இருந்தது.

சுய அறிமுகம் செய்துகொண்டு பின்னர் மதியம் இரண்டரை மணியளவில் உணவு அருந்தினோம்.  என்னதான் உணவு சுவையாக இருந்தாலும் அன்று கல்லூரி காண்டினில் சாப்பிட்ட வடை டீக்கு இணையாகுமா நண்பர்களே!  அது மட்டுமா? யாரெல்லாம் மதியம் சாப்பாடு கட்டிக்கொண்டு வந்தனரோ அவர்களில் யாரும் அவரவர் கொண்டுவந்த சாப்பாட்டை மொத்தமாக உண்ட சரித்திரம் கல்லூரியில் படித்த காலத்தில் உண்டா?  அதிலும் சிலர் கொண்டு வரும் சாப்பாடு மதியம் உணவு இடைவேளையில் இருப்பதில்லை.  வகுப்புகள் நடைபெறும் போதே காலியாகிவிடும்.  என்றாலும் ரொம்ப நாட்களுக்கு பின்னர் நாம் அனைவரும் சேர்ந்து உண்ட உணவு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விருந்துதான் என்று சொன்னால் அது மிகையாகாது! (ஆமாம் பில் கொடுத்தது யாருப்பா?)





சாப்பாடு முடிந்த பின் கல்லூரிக்கு சென்று வர முடிவெடுத்தோம்.  நாம் படித்த கல்லூரி... முப்பத்தோரு ஆண்டுகளுக்கு பின்னர்.... வாவ்... எப்படிப்பட்ட அனுபவம்.....

கல்லூரியின் முகப்பில் இருந்த வினாயகர் ஆலயம்.  அதில் கட்டப்பட்டிருந்த அஞ்சல் பெட்டி.  அதில் போட்ட காதல் கடிதங்கள்.  விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு வரும் கடிதங்கள்.  நாம் உணவருந்திய காண்டின். அமர்ந்த வகுப்பறைகள்.  பரீட்சையில் பேப்பர் பாஸ் செய்து மாட்டிக்கொண்டு முழித்த தருணம்.  NSS அலுவலகம்.  NCC அலுவலகம்.  நூலகம். ஆய்வகங்கள். விடுதியில் அடித்த லூட்டிகள்.  ஈழத்தமிழர்களுக்காக போராடிய போராட்டங்கள்.  ஸ்ட்ரைக் என்ற பேரில் பார்த்த சினிமாக்கள்.  நமது பேராசிரியர்கள் செய்து வந்த பாவனைகள்.  அவர்களை நாம் படுத்திய பாடுகள்.  அப்பப்பா..... எத்தனையெத்தனை நினைவுகள்!!!


















அவ்வளவுதானா நினைவுகள் என்றால்....
காக்கிச்சட்டை பார்க்கச்சென்று காக்கிச்சட்டையால் பெற்ற அடிகள் மறக்க முடியுமா?
என் தங்கை கல்யாணி பார்க்கச்சென்று நசுங்கி நொந்து நூலாகி போனது!
இளமை காலங்கள் படத்தை தினம் தினம் பார்த்தது மற்றும் அதனால் EXAM APPLICATION FORM கிழிந்தது...
பூவே பூச்சூடவா.... மண் வாசனை...  

ஹிந்தி படித்தது... சமஸ்க்ருதம் படித்தது...   
கண்ணன் சார்... ஃபிஸிக்ஸ் நடத்திய பீகே...  சஃபாரி அணியும் எஸ் டி.... லாட்டரி வாங்கும் எஸ் டீ... என்சீசீ மாஸ்டரான ராகவன்... ஹெச்ஓடி... வீஎம்எஸ்... இங்க்லீஷ் டீச்சர் MS லஷ்மி.... பிரின்ஸிபால் காத்தாடி ராமமூர்த்தி... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

முப்பது ஆண்டுகள் முடிந்தாலும் அந்த மூன்று ஆண்டுகள் என்பது வாழ்க்கையில் என்றென்றும் மறக்க முடியாதது.  மேலும் எங்களுக்கு எவ்வளவுதான் பிரச்சனைகள் வந்தாலும் அதிலிருந்தெல்லாம் நாங்கள் மீண்டு வந்ததற்கான மிக முக்கிய காரணமே நாங்கள் படித்த கணிதம் தான்!!

கணிதம் படிக்கும் போதே நாங்கள் தினம்தோறும் நூற்றுக்கணக்கான பிரச்சனைகளை சந்தித்து அத்தனை பிரச்சனைகளுக்கும் சரியோ தவறோ அவரவர்களுக்கு தெரிந்த அளவில் தீர்வு கண்டோம்.  அதுவே இன்றளவுக்கும் எங்களை வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து தீர்வு காண வழிகோலியது என்றால் அது மிகையாகாது.


3 comments:

  1. என்னாட யாருடைய முகமும் ஞாபகமே இல்லையே என்று பார்த்தால் நீங்கள் எல்லாம் சைன்ஸ் குருப்பு போல நான் படித்தது எகனாமிக்ஸ் குருப் அதே கல்லூரியில்

    ReplyDelete
    Replies
    1. மதுரை தமிழனே
      அதே ஆண்டுகளில் என்றால் தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புகளில் சந்தித்திருப்போமே?
      ஞாபகம் வருதா?
      எந்த வருடங்களில் படித்தீர்யா?

      Delete
  2. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete